அழகின் மறுபெயர் இயற்கை

அழகு சாதன பொருட்கள் ஆயிர கணக்கில் கடைகளில் கிடைக்கின்றன. ஆனாலும் மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இவற்றை வாங்கி பயன்படுத்துபவர்கள் என்ணிக்கை குறைவு. இதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று விலை அதிகம். இரண்டு அவற்றில் நச்சு தன்மை கொண்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. மூன்று, இயற்கையான வழிமுறைகள் நூற்று கணக்கில் நமது நாட்டில் காலம் காலமாக பின்பற்ற படுகின்றன. சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போமா?


 


ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


 


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


 


பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறை பிழிந்து அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


 


நகம் வெட்டுமுன் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


 


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவி பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். பசை நீங்கி முடி அழகு பெறும்.


 


வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலை தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்து குளித்தால், முடி பளபளப்பாகும்.


 


வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் வேர்க்குரு வராது. முகம் கறுக்காது.


 


இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு போட்டு, கரைசலால் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


 


கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.


 


தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலை பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


 


இரவு படுக்குமுன் புதினா சாறு இரண்டு ஸ்பூன், அரை மூடி எலுமிச்சம் சாறுடன் பயிற்றம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும்.  தழும்புகள் மறையும்.


 


முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோள மாவு ஒன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்தால் முட்டையுடன் முடியும் வரும். ரேசர் தேவையில்லை.


 


மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் புதிய பொலிவு பெறும்.


 


வாழை பழத்தை பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.


 


ஆரஞ்சு பழ தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.


 


பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


 


தேங்காய் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.